×

மதுரை மெட்ரோ ரயில் சேவைக்காக 20 துறைகளுடன் இணைந்து திட்ட அறிக்கை: இயக்குநர் சித்திக் தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியை போல மதுரையில் அமைக்க உள்ளது. அதன்படி, மதுரையில் பயணிகள், பொதுமக்கள் நலன் கருதி மதுரை மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் முதல் பணியாக மதுரை மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். இதற்கான ஆலோனைக்கூட்டம் மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் மதுரையில் நடந்தது.

இந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங், கூடுதல் ஆட்சியர் சரவணன், உதவி ஆட்சியர் திவ்யான் ஷுநிகம், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜூனன், முதன்மை பொது மேலாளர் ரேக பிரகாசம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மீனாட்சியம்மன் கோயில் துணை ஆணையர் அருணாச்சலம், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்த பத்மநாபன், காவல் துணை ஆணையர் சாய் பிரனித், காவல் துணை ஆணையர் அரவிந்த், காவல்துறை துணை ஆணையர் ஆறுமுகசாமி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இயக்குநர் சித்திக் கூறியதாவது: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆர்.வி.அசோசியேட்ஸ் ஆர்சி டெக்ஸ் இன்ஜினியர்ஸ் அண்ட் கன்சல்டன் நிறுவனம் கடந்த 28ம் தேதி ஒப்பந்தமாகி உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை 75 நாள் காலக்கெடுவுக்குள் தயாரிக்கப்பட்டு முடிக்க வேண்டும்.

மதுரைக்கு மறுசீரமைக்கப்பட்ட போக்குவரத்து மாதிரியின் மூலம் புதிய முன்னறிவுப்புகளை உருவாக்குவதற்கான ஆய்வு அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மக்கள் விரைவு போக்குவரத்துக்கான வாய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு நேரடி பரிசீலனைக்கு பின்னர் பல கள ஆய்வுகளுடன் ஆய்வுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி திருமங்கலம் முதல் கே.புதூர் வழியாக ஒத்தக்கடை வரை உத்தேச இடத்திற்கு இடையில் தொடர்ந்து திட்டம் சாதகமாக இருக்கும். இந்த வழித்தடம் வசந்த் நகர் முதல் கோரிப்பாளையம் வரை பூமிக்கடியில் செல்ல இருக்கிறது.

மெட்ரோ ரயில்களை பராமரிக்க சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் மெட்ரோ பணிமனைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. விரிவான சாத்தியக்கூறு அறிக்கை பகுப்பாய்வை மேற்கொண்டுள்ளது. மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 31 கி.மீ நீளத்திற்கு ரூ.8,500 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் அடங்கும். மெட்ரோ ரயில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டிருக்கிறது. நீண்ட தூரம், அதிக வேகம், நெகிழ்வு தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மெட்ரோ ரயில் பொருத்தமான வகையில் இருக்கும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 20 துறைகளுடன் இணைந்து விரிவான திட்ட அறிக்கையில் தயாரிக்கும் பணியை 75 நாட்களுக்குள் முடிக்கும் பொருட்டு கூட்டம் நடந்தது.

ஏற்கனவே உள்ள நிலத்தடி பயன்பாடு விவரங்கள் அதாவது குடிநீர் வழங்கல், கழிவுநீர், மழைநீர் பாதைகள் மற்றும் மின் இணைப்பு கேபிள்கள், எரிவாயு குழாய்கள் பிற துணை மின் பாதைகள் போன்ற பல்வேறு விவரங்கள் விரிவான திட்ட மதிப்பீட்டுக்கான ஆலோசகரிடம் பகிர்ந்து கொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலங்களை ஒருங்கிணைப்பதற்காக ரயில்வே மற்றும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

The post மதுரை மெட்ரோ ரயில் சேவைக்காக 20 துறைகளுடன் இணைந்து திட்ட அறிக்கை: இயக்குநர் சித்திக் தகவல் appeared first on Dinakaran.

Tags : Madurai Metro Rail Service ,Siddique ,CHENNAI ,Metro Rail Corporation ,Chennai Metro ,Madurai ,Madurai… ,Dinakaran ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...